பாபநாசம், ஜூலை 24: பாபநாசம் வேளாண் உதவி இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாபநாசம் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் பிரதம மந்திரி திட்டத்தின்கீழ் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் தெளிப்புநீர் மற்றும் மழைத்தூவான் ஆகியவை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது விவசாயத்துக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள சூழ்நிலையிலும் குறைந்தளவு நீரை பயன்படுத்தி அதிக மகசூலை பெற சொட்டுநீர் பாசனம் மற்றும் மழைத்தூவான், விதை தெளிப்பான் ஆகியவை அரசு மானியத்தில் வேளாண்மைத்துறை சார்பில் அமைத்து கொள்ளலாம்.இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியம் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற புகைப்படம், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சிட்டா அடங்கல், மின் இணைப்பு அட்டை நகல், சிறு விவசாயி சான்று மற்றும் நீர் மண் பகுப்பாய்வு அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பதிவு எண் வழங்கப்படும்.பின்னர் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் தேர்வு செய்து விலைப்புள்ளி தயாரித்து பணியாணை வழங்கப்படும். இத்திட்டத்தில் சிறு, குறு பொது ஆதிதிராவிடர், மகளிர் உள்ளிட்ட அனைவரும் பங்கு பெறலாம். அதிகபட்சமாக 12.5 ஏக்கர் வரை பயன்பெறலாம். பயனடைய விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.