பட்டுக்கோட்டை, ஜூலை 24: காவிரியின் குறுக்கே கதவணை கட்டும் புதிய அறிவிப்பு திட்டத்தை கைவிடகோரி பட்டுக்கோட்டையில் நடந்த குறைதீர் கூட்டத்துக்கு கருப்பு பேட்ஜ் அணிந்து விவசாயிகள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலகத்தில் பட்டுக்கோட்டை மற்றும் பேராவூரணி வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஸ்பராஜ் தலைமை வகித்தார். டிஎஸ்பி கணேசமூர்த்தி, தாசில்தார்கள் பட்டுக்கோட்டை அருள்பிரகாசம், பேராவூரணி ஜெயலட்சுமி, வட்ட வழங்கல் அலுவலர் பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். பின்னர் விவசாயிகளின் விவாதம் வருமாறு:பொன்னவராயன்கோட்டை வீரசேனன்: பட்டுக்கோட்டை, பேராவூரணி தாலுகாக்களில் அதிகளவு காட்டாறுகள் உள்ளது. கடற்கரையை ஒட்டியுள்ள இந்த ஆற்றில் இரவு, பகலாக மணல் திருட்டு நடந்து வருகிறது. கடற்கரையை ஒட்டியுள்ள இந்த பகுதியில் ஆறுகளில் மணல் திருடப்படுவதால் நிலத்தடி நீர் முழுவதும் உப்புநீராக மாறிவிட்டது. எனவே மணல் திருட்டை தடுத்து நிறுத்தி, நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்ய வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்துக்கு காவிரியில் உரிய நீரை திறந்து விடாததால் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகள் ஒருபோக நெல் சாகுபடி கூட செய்ய முடியாமல் விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். கடந்த 15ம் தேதி பொதுப்பணித்துறை மானிய கோரிக்கையின்போது பொதுப்பணித்துறை அமைச்சரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி, காவிரியின் குறுக்கே ரூ.565 கோடியில் கதவணை கட்டப்படும் என்றார். இந்த அணை கட்டுவதால் யாருக்கு பயன் என்ற அறிவிப்பை நேற்று முன்தினம் சேலத்தில் நடந்த அரசு நிகழ்ச்சியின்போது வெளியிட்டார். அந்த அறிவிப்பில் சேலம் மாவட்டத்துக்கு உட்பட்ட மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 100 ஏரி, குளங்களில் காவிரிநீர் கொண்டு நிரப்பப்படும் என்று அறிவித்தார். கர்நாடக அரசைவிட தமிழக முதல்வர் அறிவித்திருக்கிற இந்த அறிவிப்பானது ஒரு சொட்டு தண்ணீர்கூட கல்லணைக்கு வந்து சேரமுடியாத ஒரு நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு டெல்டா மாவட்ட விவசாயிகளான எங்களின் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் கருப்பு பேட்ஜ் அணிந்துள்ளோம் என்றார்.இதைதொடர்ந்து கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து விவசாயிகளும் காவிரியின் குறுக்கே கதவணை கட்டும் புதிய அறிவிப்பு திட்டத்தை கைவிடக்கோரி கோஷங்களை எழுப்பினர்.