சின்னசேலம், ஜூலை 24: கள்ளக்குறிச்சி வட்டத்தில் இந்திலி, மேலூர், உலகங்காத்தான், ஏமப்பேர், கருணாபுரம், சின்னசேலம் வட்டத்திற்கு உட்பட்ட காரனூர், சடையம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள பஞ்சமி நிலம் மற்றும் கண்டிசன் பட்டா நிலங்களை மீட்டு நிலமற்ற தலித் பெண்களுக்கு வழங்க வேண்டும் என்று கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக ஜமாபந்தியின்போது மனு கொடுத்தும், போராட்டங்கள் நடத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதை கண்டித்து அம்பேத்கர் பேரவை, தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு சார்பில் தலைவர் நிக்கோலஸ் தலைமையில் நேற்று காலை இந்திலி முருகன் கோயில் பகுதியில் மாபெரும் குடியேறும் போராட்டம் நடத்தினர்.இதுகுறித்து தகவல் அறிந்ததும் கள்ளக்குறிச்சி தாசில்தார் தயாளன், டிஎஸ்பி(பொ) மகேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஒவ்வொரு கிராமமாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாக போராட்ட குழுவினரிடம் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.