×

ஊரக வளர்ச்சித்துறையினர் வேலைநிறுத்த போராட்டம்

விழுப்புரம், ஜூலை 24: மாநில தலைவரை பணியிடை நீக்கம் செய்ததை கண்டித்து, விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியனை, பணிஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த உத்தரவை ரத்து செய்து, அவரை பணிஓய்வு பெற அனுமதிக்க கோரியும், நேற்று தமிழகம் முழுவதும் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணியாற்றும், பிடிஓக்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள் உட்பட ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று  ஊழியர்கள் அனைவரும் வழக்கம் போல், அலுவலகத்திற்கு வந்த போதிலும், வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, பணிக்கு செல்லாமல் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் அனைத்தும் வெறிச்சோடியே காணப்பட்டது. இந்த போராட்டத்தால், அரசின் வீடு கட்டும் பயனாளிகளுக்கான பட்டியல் அனுமதித்தல், கட்டுமான பணிகளுக்கான சிமெண்ட், கம்பிகள் வழங்கும் பணி உள்பட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் பாதிக்கப்பட்டது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை