×

தோள்பட்டை வலிக்காக மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டுக்கொண்டவர் சாவு: அம்பத்தூரில் பரபரப்பு

அம்புத்தூர்: தோள்பட்டை வலிக்காக மெடிக்கல் ஷாப்பில் ஊசி போட்டுக்கொண்டவர் திடீரென இறந்த சம்பவம் அம்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியது. அம்பத்தூர் அடுத்த மதானங்குப்பம், கலெக்டர் தெருவை சேர்ந்தவர் குமார் (42). டெய்லர். இவரது மனைவி மீனா. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். கடந்த ஒரு வாரமாக தோள்பட்டை வலியால் குமார் கடும் அவதிப்பட்டு வந்தார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அம்பத்தூர் அடுத்த சூரப்பட்டு சிவப்பிரகாசம் நகரில் உள்ள ஒரு மெடிக்கல் ஷாப்புக்கு சென்ற குமார், அங்கிருந்த விற்பனையாளர் பாஸ்கரன் (53) என்பவரிடம் ‘தோள்பட்டை வலிக்கு மருத்து, மாத்திரை வேண்டும்,’’ என்று கேட்டுள்ளார். அப்போது, விற்பனையாளர் பாஸ்கரன், ‘‘ஊசி போட்டுக் கொள்ளுங்கள். வலி சரியாகி விடும்,’’ என்று குமாரிடம் கூறியுள்ளார். இதற்கு குமார் சம்மதம் தெரிவித்ததை தொடர்ந்து, அவருக்கு பாஸ்கரன் ஊசி போட்டுள்ளார். அங்கிருந்து வீடு திரும்பிய பாஸ்கரன் கடும் நெஞ்சுவலியால் அலறி துடித்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனடியாக அவரை மீட்டு கொரட்டூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு உறவினர்கள் கதறி அழுதனர். தகவலறிந்த அம்பத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொற்கொடி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, பாஸ்கரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விதிமீறி ஊசி போட்ட குற்றத்துக்காக மெடிக்கல் ஷாப் உரிமையாளர் பாஸ்கரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அம்பத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...