அம்பத்தூர்: அம்பத்தூர் பஸ் நிலையத்தில் உயரழுத்த மின்வடம் திறந்தவெளியில் அமைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் விபத்து பீதியில் வந்து செல்கின்றனர். சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் அம்பத்தூர் பஸ் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு தினமும் 300க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அம்பத்தூர் சுற்றியுள்ள 70க்கும் மேற்பட்ட நகர்களை சேர்ந்த மக்கள் இந்த பஸ் நிலையத்தை பயன்படுத்தி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், இந்த பஸ் நிலையத்தில் உள்ள மின் பெட்டியில் இருந்து உயரழுத்த மின்வடம் ஒன்று திறந்த நிலையில், பாதுகாப்பற்ற முறையில் ஒரு கடைக்கு கொண்டு செல்லப்படுகிறது. பூமிக்கடியில் புதைத்து கொண்டு செல்ல வேண்டிய இந்த மின்வடம், திறந்தவெளியில் ஆபத்தான முறையில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த மின்வடம் அருகே ஓட்டல், டிபன், மருந்து, ஸ்வீட் உள்ளிட்ட கடைகள் உள்ளதால், இங்கு வருபவர்கள் இந்த மின் வடத்தை தாண்டி வர வேண்டிய நிலை உள்ளது.