×

திருப்போரூர் பேரூராட்சி பகுதிகளில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பாதாள சாக்கடை பணிகள்

* நடந்து செல்ல முடியமல் பொதுமக்கள் அவதி * எச்சரிக்கை பலகை இல்லாததால் விபத்து அபாயம்
திருப்போரூர், ஜூலை 24: திருப்போரூர் பேரூராட்சியில், எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் பாதாள சாக்கடை பணிகள் நடக்கின்றன. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பெரும் விபத்து அபாயம் உள்ளது என சமூக ஆர்வலகர்கள் கூறுகின்றனர்.திருப்போரூர் பேரூராட்சியில் கடந்த 2011ம் ஆண்டு ₹33 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஆனால், பணிகள் தொடங்கவும், ஒப்புதல் கிடைக்கவும் தாமதமானதால் 2016ம் ஆண்டு புதிய திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ₹53 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து கடந்த 6 மாதங்களாக பாதாள சாக்கடைப் பணிகள் நடந்து வருகின்றன. கச்சேரி சந்து தெரு, ஏரிக்கரை தெரு, சான்றோர் தெரு, திரவுபதி அம்மன் கோயில் தெரு ஆகிய இடங்களில் தெருக்களின் நடுவில் பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பதிக்கும் பணி முடிந்து விட்டது.தற்போது வடக்கு மாடவீதி மற்றும் வணிகர் தெரு உள்ளிட்ட சில தெருக்களில் இதற்காக மெகா பள்ளங்கள் தோண்டப் பட்டுள்ளது. இந்த பள்ளங்களை சுற்றி எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யவில்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

10 அடி ஆழத்திற்கு மேல் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளதால், இவ்வழியே செல்லும் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், ஒரு வித அச்சத்துடன் சென்று வருகின்றனர். பாதாள சாக்கடை பணிகள் நடப்பது குறித்த எவ்வித அறிவிப்பு பலகைகளும் வைக்கவில்லை.இதேபோன்று பேருராட்சிக்கு உட்பட்ட காலவாக்கம் கிராமத்தில் பழைய மாமல்லபுரம் சாலையில் மெகா பள்ளங்கள் தோண்டப் பட்டுள்ளன. இதனால் இரவு நேரத்தில் பைக்கில் செல்வோர் பள்ளத்தில் விழுந்து வபித்தை சந்திக்கும் அபாயமும் உள்ளது. எனவே, பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொள்ளும் தனியார் ஒப்பந்ததாரர்கள் உரிய முன்னேற்பாடுகளை செய்து திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...