×

ஆரணியில் வரதட்சணை கேட்டு கொடுமை ஆபாச வீடியோ எடுத்து பெண் டாக்டருக்கு மிரட்டல் கணவன் கைது


ஆரணி, ஜூலை 24: வரதட்சணை கேட்டு பெண் டாக்டரை கொடுமைப்படுத்தியதுடன், தாம்பத்திய உறவை வீடியோ எடுத்து மிரட்டல் விடுத்த கணவனை ஆரணி போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை நேரு நகரை சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகள் நந்தினி(29). இவர் ஆரணியில் உள்ள தனியார் மருத்துவமனையில் கண் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சித்தூர் துர்கா நகரை சேர்ந்த சீனிவாசன் மகன் சத்திய நாராயணா(30) என்ற இன்ஜினியருக்கும், கடந்த பிப்ரவரி மாதம் இருவீட்டாரின் ஏற்பாட்டின்பேரில் திருமணம் நடந்தது. அதன் பின்னர், சித்தூர் துர்கா நகரில் உள்ள சத்திய நாராயணா வீட்டில் இருவரும் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சத்திய நாராயணா தனது மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டதை அவருக்கு தெரியாமல் செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டாராம்.

இந்த வீடியோவை தனிமையில் அமர்ந்து சத்திய நாராயணா பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதை தற்செயலாக கவனித்த நந்தினி அதிர்ச்சியடைந்தார். வீடியோவை உடனடியாக அழிக்குமாறு கூறியதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சத்தியநாராயணா, நந்தினியை ஆபாசமாக பேசி அடித்ததாக கூறப்படுகிறது.இதுகுறித்து நந்தினி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் சத்தியநாராயணாவிடம், ‘தகராறு செய்யாமல் குடும்பம் நடத்து, இல்லை என்றால் திருமணத்தின்போது கொடுத்த சீர்வரிசை பொருட்கள், 75 சவரன் நகையை திருப்பி கொடு’ என கூறினார்களாம்.அதற்கு சத்திய நாராயணா, ‘எதையும் திருப்பி தரமுடியாது, மேலும் ₹10 லட்சம் கொடுத்தால் மட்டுமே உங்களது மகளுடன் குடும்பம் நடத்துவேன்’ என கூறினாராம். இதையே, நந்தினியிடமும் கூறிவந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அப்போது, பணம் கொண்டு வரவில்லை என்றால், உன்னை கொலை செய்து விடுவேன் என சத்திய நாராயணா மிரட்டி அடித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நந்தினி ஆரணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், சத்திய நாராயணாவிடம் டிஎஸ்பி செந்தில், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) வினாயகமூர்த்தி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் அஜந்தா வழக்குப்பதிந்து சத்திய நாராயணனை நேற்று கைது செய்து, ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தார். மேலும், தலைமறைவாக உள்ள சத்திய நாராயணனின் தந்தை, தாயை தேடிவருகிறார்.கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சத்திய நாராயணா, நந்தினி ஆகிய இருவருக்கும் வேறு நபர்களுடன் திருமணமாகி விவாகரத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
× RELATED அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே...