வருசநாடு, ஜூலை 23: வருசநாடு பகுதியில் ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு தீவிர பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது. வருசநாடு பகுதியில் ஏர் உழவர் சங்கத்தின் சார்பாக ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. நீரில் நீந்த வைப்பது, மணலில் உழவு செய்வது, சாலைகளில் வேகமாக ஓடும் பயிற்சியென ரேக்ளா ரேஸில் பங்கேற்கும் மாடுகளுக்கு வருசநாடு பகுதியில் தினசரி பயிற்சி அளிக்கப்படுகிறது.இதனால் கடமலை - மயிலை ஒன்றிய மாடுகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் சின்னமனூர், கம்பம், ஆண்டிபட்டி. மதுரை போன்ற பகுதிகளில் இருந்து ரேக்ளா ரேஸ் மாடுகள் வாங்குவதற்கு வியாபாரிகள் ஏராளமாக வருகின்றனர். இதுகுறித்து ரேக்ளா ரேஸ் மாடுகளுக்கு பயிற்சி அளிப்பவரிடம் கேட்டதற்கு, `` நாங்கள் பயிற்சியை முழுமையாக மாடுகளுக்கு அளித்த, அவற்றின் விலை கிடுகிடு என உயர்ந்து விடும். எனவே, தொடர்ந்து மாடுகளுக்கு பயிற்சி அளித்து வருகிறோம். மாடுகளுக்கு காலையில் சுண்டல், தேன், பேரீச்சை பழம், மாதுளை, பருத்திபால், பிண்ணாக்கு போன்றவற்றை உணவாகக் கொடுக்கிறோம். பயிற்சி முழுமையடைந்த பின்பு வெளி ஊர்களில் போட்டி பந்தயங்களுக்கு கொண்டுசெல்வது வாடிக்கையாக உள்ள. போட்டிகளில் வெற்றி பெறும் மாடுகளை குலதெய்வமாக வணங்கி வருகிறோம்’’ என்றார்.