×

பல கோடி செலவில் கட்டி முடித்து பயன்பாட்டுக்கு வராததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய கட்டுமான தொழிலாளர்கள் ஓய்வுக்கூடம்

திருப்போரூர், ஜூலை 23: திருப்போரூர் தையூரில் ₹16 கோடி செலவில் கட்டி முடித்து, வட மாநிலத்தவரின் பயன்பாட்டுக்கு கொண்டு வராததால், தொழிலாளர்களின் ஓய்வு கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. பழைய மாமல்லபுரம் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்த கட்டுமான பணிகளில் உத்தரபிரதேசம், அசாம், பீகார், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா உள்பட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.பெரும்பாலான கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் தகர கொட்டகை அமைத்து பணியாளர்களும், அவர்களது குடும்பங்களும் தங்க வைக்கப்படுகின்றனர். இதனால், பல இடங்களில் அவர்களது பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. பெண்கள், குழந்தைகள் மழைக்காலங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும், இரவு நேரங்களில் தூங்குவதற்கு சரியான இடம் இல்லாததால், வேலை செய்யும் போது பாதிப்பு ஏற்பட்டு விபத்துக்களை சந்தித்தனர். இதையடுத்து வெளி மாநில கட்டுமானத் தொழிலாளர்கள் தங்குவதற்காக கேளம்பாக்கத்தை அடுத்த தையூரில் தமிழ்நாடு கட்டுமான நல வாரியம் சார்பில் கட்டுமான தொழிலாளர்களுக்கான ஓய்வுக்கூடம் ₹16 கோடியே 84 லட்சத்தில் கட்டப்பட்டது. இங்கு 1000 படுக்கைகள் கொண்ட தொழிலாளர்கள் தூங்கும் அறைகள், ஏடிஎம் மையம், அம்மா உணவகம், குளியல் மற்றும் கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சலவையகம், மருத்துவ ஆலோசனை மையம், மருத்துவ சிகிச்சை மையம் ஆகியவை உள்ளன. கடந்த 2015ம் ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டு 2016ம் ஆண்டு பணிகள் நிறைவு பெற்றன. ஆனால், 2 ஆண்டுகள் பூட்டி வைக்கப்பட்டிந்த நிலையில் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இக்கட்டிடத்தை திறந்து வைத்தார். திறக்கப்பட்டு ஒரு ஆண்டு முடிவடைந்து இதுவரை, பயனாளிகளுக்கு இந்த கட்டிடம் வழங்கவில்லை.

இதனால் பல கோடி செலவில் கட்டப்பட்ட இக்கட்டிடம், தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் மர்மநபர்கள் உள்ளே நுழைந்து மது அருந்துதல், சூதாட்டம் உள்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
பல கோடிகளை செலவழித்து கட்டப்பட்ட இக்கட்டிடத்தை, தொழிலாளர்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால், ஓரளவுக்கு வடமாநில தொழிலாளர்கள் பயன்படுத்த முடியும். மேலும், திட்டத்தின் நோக்கம் நிறைவேறும் என கட்டுமான தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் நலத்துறை சார்பில் கட்டப்பட்ட இக்கட்டிடத்தை மாவட்ட நிர்வாகம் திறந்து தொழிலாளர்களின் பயன்பாட்டுக்கு விட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...