×

நாகர்கோவில் அருகே நடந்த இரட்டை கொலையில் 4 வது நபரும் கைது வெளியூர் செல்ல பஸ்சுக்காக நின்ற போது சிக்கினார்

சுசீந்திரம், ஜூலை 23 : நாகர்கோவில் அடுத்த பறக்கை வண்டிகுடியிருப்பு பகுதியை சேர்ந்த முருகேசபெருமாள் மகன் அர்ஜூன் (17), தென்தாமரைக்குளம் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் மகன் அஜித்குமார் (18) ஆகியோர் கடந்த 7ம் தேதி பறக்கை சி.டி.எம். புரம் சானல்கரை ரோட்டில் பைக்கில் வரும் போது வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி பறக்கை அரசன் காட்டுவிளையை சேர்ந்த சுந்தர், நிஷாந்த் மற்றும் வல்லன்குமாரன்விளையை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற மோகன், அவரது தம்பி ரமேஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குபதிவு செய்து தேடிவந்தனர். இதில் சுந்தர், ரமேஷ் ஆகிய இருவரும் தாம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை சுசீந்திரம் போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.இந்த நிலையில் தலைமறைவாக இருந்த அழிச்சன்காட்டுவிளையை சேர்ந்த நிஷாந்த் என்பவரை நேற்று முன் தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் நிஷாந்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ராமச்சந்திரனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் ராமச்சந்திரன், நேற்று மதியம் என்.ஜி.ஓ. காலனி பஸ் நிறுத்தம் அருகே வெளியூர் செல்ல பஸ்சுக்கு காத்து நிற்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து டி.எஸ்.பி. பாஸ்கரன் தலைமையில் போலீசார் சென்று, ராமச்சந்திரனை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர்.
அப்போது கொலையாளிகள் வேறு யாரும் உண்டா? என்ற கோணத்தில் விசாரணை நடந்துள்ளது. ஆனால் இது பற்றிய தகவல்களை ராமச்சந்திரன் தெரிவிக்க வில்லை என்று போலீசார் கூறினர். கைதான ராமச்சந்திரன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய நால்வரும் கைது செய்யப்பட்டு விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags :
× RELATED கன்னியாகுமரி மீனவர் குஜராத் கடலில் மாயம்