சிவகங்கை, ஜூலை 23: சிவகங்கை மாவட்டத்தில், தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, தொழிற்கூடங்களுக்கு விரைவாக உரிமம் வழங்கப்படும் என மாவட்ட தொழில் மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை விரைவுபடுத்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனக் கொள்கைகள் எளிமையாக்கப்பட்டு தொழிற்கூடங்கள் நிறுவுவதில் ஏற்படும் அனைத்து இடர்பாடுகளை களைய, கலெக்டர் தலைமையில் ஒரு முனை தீர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு வாயிலாக ஒற்றைச் சாளர முறையில் தொழிற்கூடங்கள் நிறுவுவதற்கு தேவையான அனைத்து வகையான உரிமங்கள், மின் இணைப்புகள், ஒப்புதல்கள், தடையின்மை சான்றிதழ்கள் ஆகியவற்றை அரசுத் துறைகள், நிறுவனங்களிடமிருந்து உடனுக்குடன் பெற்றுக் கொள்ள, உரிய ஆவண விபரங்களுடன் மாவட்ட தொழில் மையத்தில் விண்ணப்பித்தால் உரிய காலவரையறைக்குள் குழு தேவையான ஆணைகளை பிறப்பிக்கும். அவ்வாறு உரிய காலவரையறைக்குள் ஆணைகள் பிறப்பிக்கப்படவில்லை எனில் அத்தகைய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டதாக கருதப் பெறும். எனவே தொடர்புடைய அரசுத் துறைகள், அரசு நிறுவனங்கள், அமைப்புகள் இதில் உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பது இன்றியமையாததாக அமைந்துள்ளது. மேலும், தேவையற்ற கால இடைவெளி முற்றிலுமாக தவிர்க்கப்படும். இந்த நடைமுறையை சிவகங்கை மாவட்டத்திலுள்ள தொழில் முனைவோர்கள் பயன்படுத்தி தேவையான அனைத்து உரிமங்கள், ஒப்புதல்களை உரிய காலத்தில் பெற்று பயனடையலாம். கூடுதல் தகவல் அறிய சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தை நேரிலோ அல்லது 04575-240257 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.