ழநி, ஜூலை 23: ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுமுறையில் கொண்டுவரப்பட்ட மாற்றத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூன் மாதம் 2ம் தேதி நடத்தப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டது. ஐஏஎஸ் தேர்வு முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகம் என 3 நிலைகளைக் கொண்டது. தற்போது யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வில் மாற்றங்கள் செய்யவும், சி சாட் எனும் திறனறித் தாளை நீக்கவும் பரிந்துரை செய்திருப்பது தேர்வாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென தேர்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறுகையில், 2011ம் ஆண்டிற்கு முன் யுபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வு விருப்பப்பாடம், பொதுஅறிவு பாடங்களைக் கொண்டதாக அமைந்திருந்தது. 2011ம் ஆண்டிற்கு பின் மத்திய அரசு சில மாற்றங்களைச் செய்து சி சாட்-1, சி சாட்-2 என 2 தாள்களை அறிமுகப்படுத்தியது. சி சாட்-2 என்பது திறனறிவு தாளாகும். இந்த தாளில் கிராமப்புற அரசுப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்ற மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினமான சூழ்நிலையாக இருந்தது. கடந்த 8 ஆண்டுகளில் இந்த தாளில் கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்றவர்களே அதிகமாக தேர்ச்சி பெற்றனர். கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தற்போது யுபிஎஸ்சி புதிய மாற்றம் கொண்டு வர மத்திய அரசிற்கு பரிந்துரைத்துள்ளது. இது காலம் தாழ்ந்த முடிவானாலும் சிறப்பானதே. யுபிஎஸ்சியின் பரிந்துரையை மத்திய அரசு உடனடியாக அமல்படுத்தினால் கிராமப்புற ஏழை மாணவர்கள் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது எளிதாக அமையும் என்றார்.