திருச்சியில் ஒரே நாளில் 2 கடைகள், கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் திருட்டு மர்மநபர்கள் துணிகரம்

திருச்சி, ஜூலை 23: திருச்சி பழக்கடை, அடகுக்கடை மற்றும் கார் கண்ணாடியை உடைத்து ரூ.4 லட்சம் பணம் மற்றும் காமிரா வீடியே பதிவுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். ஒரேநாளில் 3 இடங்களில் அடுத்தடுத்து நடைபெற்ற கொள்ளை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் வடக்குப்பட்டியை சேர்ந்தவர் பாரதிராஜா(37). இவர் திருச்சி கருமண்டபத்தில் காய்கறி, பழக்கக்கடை, குளிர்பானக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு சென்றார். நேற்று காலை கடையை திறக்க வந்தபோது ஷட்டர் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாவில் இருந்த ரூ.3 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பாரதிதாசன் கன்டோன்மென்ட் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். உதவி கமிஷனர் மணிகண்டன், இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் மற்றும் கைரேகை நிபுணர்கள் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.காய்கறிக்கடையில் கண்காணிப்பு காமிரா பொருத்தப்பட்டு இருந்தது. இதைஅறிந்த கொள்ளையர்கள் கண்காணிப்பு காமிராவின் பதிவுகள் அடங்கிய வீடியோ டிஸ்க் ரிக்கார்டரையும் எடுத்து சென்று விட்டனர். எனவே கொள்ளையர்கள் பற்றிய பதிவுகள் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கார் கண்ணாடியை  உடைத்து திருட்டு: தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் அடகுகடை வைத்து நடத்தி வருபவர் சிவராசன்(48). இவர் நேற்றுமுன்தினம் திருச்சி தில்லைநகர் வந்தார். அங்கு காரை நிறுத்தி விட்டு ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று விட்டு சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அப்போது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது. காரில் இருந்த ரூ.40 ஆயிரம் ரொக்கம், அடகுகடை தஸ்தாவேஜூகள் அடங்கிய பையை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தில்லைநகர் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி கோட்டை இபி ரோட்டை சேர்ந்தவர் தியாகராஜன். இவர் திருச்சி மதுரை ரோட்டில் வீட்டு அலங்கார பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் இரவு இவரது கடையில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ரூ.60 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்சி மாநகரில் 3 இடங்களில் மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் போலீசாருக்கு சவாலாக உள்ளது.

Related Stories: