பைக் விபத்தில் தொழிலாளி பலி

மரக்காணம், ஜூலை 23: புதுச்சேரி மாநிலம் வேல்ராம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அன்புகுமார் (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் ஜெகன்மோகன் (24) என்பவரும் கடந்த 14ம் தேதி புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு ஒரே பைக்கில் சென்றனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே ஜெகநாதபுரம் என்ற இடத்தில், சாலையோரம் நின்றிருந்த அப்பகுதியை சேர்ந்த காசி (52) என்பவர் மீது எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பைக் அருகில் இருந்த மரத்தின் மீது மோதியதில், பைக்கில் வந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். படுகாயம் அடைந்த காசி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி காசி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது உறவினர்கள் மரக்காணம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: