விழுப்புரம், ஜூலை 23: விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் நேற்று காலை தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் சம்பத் முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரராஜா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை அமைக்க வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், பொது வினியோக திட்டப்பணிகள் முழுவதையும் கணினி மயமாக்க வேண்டும், பணிவரன்முறை செய்யப்படாத பணியாளர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி பணிவரன்முறை செய்ய வேண்டும், ரேஷன் கடைகளுக்கு சொந்த கட்டிடம் கழிவறையுடன் கட்டப்பட வேண்டும் என்பது உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் துணைத்தலைவர்கள் கோபிநாதன், தட்சிணாமூர்த்தி, தன்ராஜ், இணை செயலாளர்கள் தனசேகரன், பழனிவேல், கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பொருளாளர் ராஜ் நன்றி கூறினார்.