×

நீர் மேலாண்மைக்கு மத்திய அரசு கூடுதல் நிதி வழங்க வேண்டும்

புதுச்சேரி, ஜூலை 23:    புதுச்சேரி சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில், அரசின் தீர்மானமாக, நீர்வளம் பாதுகாப்பதற்கான தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசியதாவது: புதுச்சேரி பொதுப்பணித்துறை பராமரிப்பில் 84 ஏரிகளும், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து பராமரிப்பில் 620 குளங்களும் உள்ளது. புதுச்சேரி பகுதி வழியாக செல்லும் தென்பெண்ணை ஆறு, சங்கராபரணி ஆறு, குடுவையாறு, மலட்டாறு மற்றும் பம்பையாறு ஆகிய ஐந்து ஆறுகளின் குறுக்கே பொதுப்பணித்துறை மூலமாக இரண்டு தடுப்பணைகள் கட்டப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்கு ஆவணம் செய்யப்பட்டுள்ளது.  மேலும் ஒரு புதிய அணை சங்கராபரணி ஆற்றின் குறுக்கே செட்டிப்பட்டு கிராமத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. இதே ஆற்றின் குறுக்கே செல்லிப்பட்டு மற்றும் கோனேரிக்குப்பம் கிராமத்தில் இரண்டு புதிய தடுப்பணைகள் ரூ.40 கோடி செலவில் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் ஒருங்கிணைந்த மேற்பரப்பு நீர் மேலாண்மை புத்துணர்வு அளிக்கும் திட்டத்தின் கீழ் பொதுப்பணித்துறையை சேர்ந்த 25 ஏரிகளிலும், கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த 32 குளங்களிலும் ரூ.16 கோடி செலவில் பணி செய்ய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. இதற்கான முதல் தவணையாக ரூ.3.86 கோடி மத்திய அரசால் விடுவிக்கப்பட்டு,  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கட்டிடங்கள், தனியார் தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வீடுகளிலும் மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்க வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.  நீரின் அத்தியாவசியமான தேவையை உணர்ந்து, புதுச்சேரி அரசு கடந்த 2003ம் ஆண்டு புதுச்சேரி நிலத்தடி நீர் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம்- 2002 என்ற சட்டத்தை இந்தியாவிலேயே முதல் முறையாக அமல்படுத்தியது. அதன்படி  நிலத்தடி நீரை வெளிகொணர்வதை ஒழுங்கு முறைப்படுத்தும் வகையில், கடற்கரையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவுக்குள் எந்த ஒரு புதிய குழாய் கிணற்றையும் அமைக்க தடை செய்யப்பட்டுள்ளது. குடி தண்ணீர் வினியோகத்துக்காக, பொதுப்பணி துறையினரால் அமைக்கப்படும் குழாய் கிணறுகளுக்கு மட்டும் இச்சட்டத்தில் விதிவிலக்கு அளிக்கப்பட்டு, புதுச்சேரி நிலத்தடி நீர் ஆணையம் அனுமதி வழங்குகிறது.

அதேபோல் நாளொன்றுக்கு 10 ஆயிரம் லிட்டருக்கு மேல் நீர் தேவைப்படும் எந்தவொரு தொழிற்சாலைக்கும் கடற்கரையிலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவுக்குள் அனுமதி அளிக்கப்படுவதில்லை. அதுமட்டுமல்லாது, புதுச்சேரி பிராந்தியத்தில் விவசாய உபயோகத்துக்கு வண்டல் மணற்படுகையிலிருந்து நிலத்தடி நீரை வெளிக்கொணரும் கிணறுகளுக்கிடையேயான அளவு 150 மீட்டர் என்றும், கடலூர் மணற்படுகையிலுள்ள நிலத்தடி நீரை வெளிக்கொணரும் கிணறுகளுக்கிடையேயான அளவு 250 மீட்டர் என்றும், வானூர் ராமநாதபுரம் மணற்படுகையில் நிலத்தடி நீரை வெளிக்கொணரும் கிணறுகளுக்கிடையேயான அளவு 300 மீட்டர் என்றும் நிர்ணயிக்கப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  புதுச்சேரியை  சேர்ந்த காரைக்கால் பகுதியில் உள்ள 4 ஏரிகளில், நல்லம்பல் ஏரி சீரமைக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீதியுள்ள 3 ஏரிகளும் கூடிய விரைவில் தூர்வார ஆவன செய்யப்படும். மேலும் காரைக்காலில் உள்ள ஆறுகளின் கடை, மடை பகுதிகளில் 7 தடுப்பணைகள் கட்டப்பட்டு, கடலில் நீர் உட்புகாதவாறும், நிலத்தடி நீர் மட்டம் உயர்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. காரைக்காலில் நிலத்தடி நீர் சட்டப்படி, விவசாய உபயோகத்துக்கு 6 மீட்டர் ஆழம் வரை அமைக்கப்படும் கிணறுகளுக்கான இடைவெளி 150 மீட்டர் என்றும், ஆழ் குழாய் கிணறுகளுக்கான இடைவெளி 500 மீட்டர் என்றும் நிர்ணயிக்கப்பட்டு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் மாகே மற்றும் ஏனாம் பகுதிகளிலும் உள்ள நீர் நிலைகளை வளப்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். நீரை சார்ந்த தொழிற்சாலைகளான மினரல் வாட்டர் உற்பத்தி தொழிற்சாலைகள், குளிர்பான தொழிற்சாலைகள் ஆகியவை புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைப்பது, முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே புதுச்சேரியில் நிலத்தடி நீரின் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு, தண்ணீர் மேலாண்மைக்காகவும், புதுச்சேரி பிரதேசத்தில் உள்ள அரசு நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தண்ணீரை வீணாக்காமல் சிக்கனமாக பயன்படுத்தும்படியும்,  தண்ணீரை சேமிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அனைவரும் ஒத்துழைக்கும்படியும் கேட்டுக் கொள்வதோடு, புதுச்சேரி நீர் மேலாண்மைக்கும், நீர்வளப் பாதுகாப்பிற்கும் கூடுதல் நிதி வழங்கக் கோரி மத்திய அரசை இச்சட்டப்பேரவை கேட்டுக் கொள்கிறது என்ற தீர்மானத்தை முன் மொழிகின்றேன் என்றார்.
  தொடர்ந்து, இந்த தீர்மானத்தை ஆதரித்து எம்எல்ஏக்கள் பேசினர். இதையடுத்து, இந்த அரசு தீர்மானத்தை குரல் வாக்கெடுப்புக்கு சபாநாயகர் சிவக்கொழுந்து அனுமதித்தார். இதனை உறுப்பினர் ஏற்றுக் கொண்டதையடுத்து தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. இன்று மீண்டும் கூடவுள்ள சட்டசபையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்தக்கூடாது,  இந்தியை திணிக்கக்கூடாது, தமிழ்மொழி உட்பட மும்மொழி கொள்கையை கடைபிடிக்க மத்திய அராசை கேட்டுக்கொள்வது,  நீட் மற்றும் நெக்ஸ்ட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளது.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...