கடலூர், ஜூலை 23: கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் கிராமத்தில் வசிக்கும் பொன்னுசாமி மனைவி செல்வியை (45) மின்கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொடுமைப்படுத்தி, துன்புறுத்தி, மானபங்கம் செய்துள்ள சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டித்துள்ளது.இது தொடர்பாக அந்த கட்சியின் மாவட்ட செயலர் ஆறுமுகம் விடுத்துள்ள அறிக்கை: .காதலித்த பெண்ணை தன் மகன் அழைத்து சென்றான் என்ற காரணத்தை வைத்து காதலன் தாயை கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியுள்ள சம்பவம் நாகரீகமற்ற செயல். காதலர்கள் ஊரை விட்டு சென்றுள்ள சம்பவம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விசாரணை நடைபெற்று வருகிற நிலையில், இச்சம்பவம் நடந்திருப்பது காவல்துறை அலட்சியபோக்கை காட்டுகிறது.இப்பிரச்னையில் தொடர்பே இல்லாத காதலன் தாயை கட்டி வைத்து அடித்து துன்புறுத்தியதால், படுகாயமடைந்த செல்வி விருத்தாசலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று
வருகிறார். இச்சம்பவத்தில் தொடர்புடைய கட்டி தாயை வைத்து தாக்கி, துன்புறுத்தி கொடுமைப்படுத்தியவர்கள் மீது காவல்துறை உரிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்யவேண்டும் என்று கூறியுள்ளார்.