ஸ்பிக்நகர், ஜூலை 23: முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பாரத் ரத்னா காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி நடத்தப்பட்டது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று விளையாடினர். இதில் தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக மேல்நிலைப் பள்ளி கபடிக் குழு மாணவர்கள், முதலிடம் வென்று சூழல்கோப்பையை தட்டிச்சென்றனர். சாதனை படைத்த இவர்களுக்கு பள்ளித் தாளாளர் சோமு பரிசு வழங்கிப் பாராட்டினார். மாணவர்களும், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமலை குமாரும் இதற்கான பரிசுகளை பெற்றுக்கொண்டனர். பரிசு பெற்ற கபடி குழுவை சேர்ந்த மாணவர்களை பள்ளி முதல்வர் சாந்தி, செயலாளர் ராமசாமி, துணை செயலாளர் செந்தில் கணேஷ், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பாராட்டினர்.