தூத்துக்குடி, ஜூலை 23: கல்விளை கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதிப்படுவதாக பொதுமக்கள், கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து உடன்குடி ஒன்றியம் செம்மறிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கல்விளை கிராம மக்கள் கலெக்டரிடம் அளித்துள்ள மனு: எங்கள் ஊரில் 150 குடும்பங்களாக வசித்து வருகிறோம். எங்கள் ஊருக்கு செம்மறிக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அணைத்தலை வழியாக நங்கைமொழி ஊருக்கு செல்ம் வழியில் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆழ்துளை கிணறு கடந்த ஓராண்டுக்கு முன்னர் மூழ்கிவிட்டது. இதையடுத்து மற்றொரு ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வழங்குமாறு பல முறை மனு அளித்தும் பலனில்லை. இதனிடையே புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்துள்ள போதும் அதில் தண்ணீர் நிரப்ப ஆழ்துளை கிணறு அமைக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் எங்கள் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் நாங்கள் பல்வேறு பகுதிகளுக்கு சென்று குடிநீர் பிடித்து வரும் அவலம் நீடிக்கிறது. எனவே, புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து அதில் இருந்து கிடைக்கப்பெறும் தண்ணீரை சுத்திகரித்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி குடிநீராக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.