திருச்செந்தூர், ஜூலை 23: அஞ்சல் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என சேமிப்பு வங்கி கட்டுப்பாடு ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. அஞ்சல் துறையின் சேமிப்பு வங்கி கட்டுப்பாடு ஊழியர்கள் சங்கம் சார்பில் 33வது மாநில மாநாடு திருச்செந்தூரில் 2 நாட்கள் நடந்தது. முதல் நாள் நடந்த மாநாட்டிற்கு பொருளாய்வு மாநில தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில செயலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் விமலாராணி ஆண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் கணபதி சுப்பிரமணியன் வரவு- செலவு திட்ட அறிக்கை வாசித்தார். 2வது நாள் மாநாட்டு நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தேர்வு நடந்தது. இதில் காளிதாஸ் மாநில தலைவராகவும், விமலாராணி மாநில செயலாளராகவும், சுப மாநில பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநாட்டில், ஊழியர்களின் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அஞ்சல் துறையில் காலியாக உள்ள அனைத்துப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் மாநிலம் முழுவதும் இருந்து, சார்பாளர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை வரவேற்பு கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.