பராமரிப்பின்றி உருக்குலைந்த நாலுமாவடி- குரும்பூர் சாலையில் சீரமைப்பு பணிகள் துவங்கின

நாசரேத், ஜூலை 23:  பராமரிப்பின்றி உருக்குலைந்த நாலுமாவடி- குரும்பூர் சாலையில் தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைப்பு பணிகள் தற்போது துவங்கியுள்ளன. நாசரேத்  - குரும்பூர் இடையே முறையான பராமரிப்பின்றி நாலுமாவடி- குரும்பூர் சாலை உருக்குலைந்து போனது. மருந்துக்குக்கூட பராமரிக்கப்படாததால் பல ஆண்டுகளாக  குண்டும், குழியுமாகக் காணப்பட்டது. இச்சாலை வழியாக புன்னைநகர் வனத்திருப்பதி கோயிலில் நடைபெறும் விழாக்களுக்கும்,  நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் நடைபெறும்  ஜெபகூட்டங்களுக்கும் சிறப்பு பஸ்கள் மற்றும் வாகனங்களில் ஏராளமானோர் சென்று வரும் நிலையில் இதை சீரமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதனால் மக்கள் படும் அவதிகுறித்து உடனடியாக சாலையை சீரமைக்க வலியுறுத்தியும் தினகரனில் படத்துடன் செய்திகள்  வெளியாகின. இதன் எதிரொலியாக நாலுமாவடி- குரும்பூர் சாலையில்  சீரமைப்பு பணிகள் நேற்று துவங்கின. இதை வரவேற்றுள்ள அப்பகுதி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

Related Stories: