பொன்னமராவதி, ஜூலை 23:
பொன்னமராவதி அருகே உள்ள மேலைச்சிவபுரியில் ரத்ததான முகாம் நடந்தது. மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி, மேலைச்சிவபுரி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் செஞ்சுருள் சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் மற்றும் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.முகாமிற்கு கல்லூரிக்குழு தலைவர் நாகப்பன் தலைமை வகித்தார். சன்மார்க்க சபை தலைவர் பழனியப்பன், முதல்வர் சொர்ணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் சன்மார்க்க சபையின் செயலர் பழனியப்பன் புதுக்கோட்டை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ் முன்னிலையில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர். அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் உத்தமன், டெங்கு குறித்த விழிப்புணர்வு குறித்து பேசினார். மேலும் கல்லூரியின் பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் பழனியப்பன் நன்றி கூறினார்.