×

தமிழக அரசு இலவசமாக வழங்கிய முன்னாள் ராணுவ வீரரின் இடத்தில் அத்தி மரக்கன்று நட முடிவு

உத்திரமேரூர், ஜூலை 19: காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு உத்திரமேரூர் ஒன்றியத்தில், 2,825 அத்தி மரக்கன்று நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைபவம் நடந்து வருகிறது. இங்கு, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, அத்திவரதரை தரித்து செல்கின்றனர். அத்திவரதர் வைபவத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும், 40 ஆயிரம் அத்திமர கன்றுகளை நடுவதற்கு மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. அதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.இதையொட்டி, உத்திரமேரூர் ஒன்றியம் தண்டரை, திருப்புலிவனம், காட்டுப்புத்தூர், கட்டியாம்பந்தல், அரசாலிமங்கலம், அகரம் தூளி, கலியபேட்டை, பினாயூர், சித்தாலப்பாக்கம், அயலகாவூர் உள்பட 19 ஊராட்சிகளில் 2,825 மரங்கள் நடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
 
பென்னாலூர் கிராமத்தில் மட்டும் 50 ஏக்கர் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு 1,200 மரங்கள் நட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், பென்னாலூர் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரது குடும்பத்துக்கு 5 ஏக்கர் நிலம் இலவசமாக, தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டது. இந்த இடங்களும், இந்த மரம் நடும் இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதை அறிந்த ராணுவ வீரரின் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் புகார் செய்தனர். அப்போது, வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ‘தற்போது, அந்த இடம் புறம்போக்கு இடமாக இருந்ததால்தான் தேர்வு செய்தோம். அரசு இலவசமாக வழங்கினாலும், அதற்கான பட்டா இருக்கிறதா? இருந்தால் அதை கொடுங்கள் வழங்கி விடுகிறோம்’’ என்றார்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு