திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 19: பூதலூர் வட்டரத்தில் செங்கிப்பட்டி, சானூரப்பட்டி, பாலையப்பட்டி வடக்கு, பாலையப்பட்டி தெற்கு, ஆவாரம்பட்டி மற்றும் புதுப்பட்டி ஆகிய கிராமங்களில் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழு தாக்குதலை தொழில்நுட்பங்களோடு ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை விவசாயிகள் பின்பற்றி கட்டுபடுத்தலாம்.
ஆழமான உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். விவசாயிகள் ஒரே நேரத்தில் விதைப்பு மேற்கொள்வதால் புழு தாக்குதலை கட்டுப்படுத்தலாம். பவேரியா பேசியானா அல்லது தயோமீதாக்சம் மருந்து ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் வீதம் கலந்து விதைநேர்த்தி செய்ய வேண்டும். கடைசி உழவின்போது ஒரு ஏக்கருக்கு வேப்பம்புண்ணாக்கு 100 கிலோ இட வேண்டும். பயிர் ;நெருக்கமாக இருந்தால் படைப்புழு வேகமாக வளரும். ஆகையால் இடைவெளி 60 சென்டி மீட்டருக்கு 25 சென்டி மீட்டர் என்ற அளவில் இடைவெளியில் விதைக்க வேண்டும்.