கும்பகோணம், ஜூலை 19: காற்று, மழைலிருந்து காப்பாற்றுவதற்காக குறுவை நெற்பயிருக்கு நுண்ணூட்ட உரம் தெளிப்பு பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.தஞ்சை மாவட்டத்தில் 40 ஆயிரம் ஹெக்டேர் அளவில் குறுவை சாகுபடியை விவசாயிகள் செய்துள்ளனர். ஆறு, வாய்க்கால்களில் தண்ணீர் வராமல் வறண்டதால் குறுவை சாகுபடியை விவசாயிகள் ஆழ்குழாய் மோட்டாரை கொண்டு நடவுப்பணி செய்துள்ளனர். தற்போது 80 சதவீத நடவுப்பணி நடந்துள்ளது. குறுவை சாகுபடிக்காக கடந்த மே மாத இறுதியில் விதை விதைத்து ஜூன் மாதம் தொடக்கத்தில் நடவு செய்துள்ளனர். தற்போது அனைத்து பயிர்களும் சூழ்பருவத்திற்கு வளர்ந்துள்ளது.ஆடி மாதம் துவங்கியுள்ள நிலையில் காற்று பலமாக வீசுவதாலும், இதே நேரத்தில் மாலை நேரங்களில் மழை பெய்து வருவதாலும், நாற்றுகளில் பூச்சிகள் விழாமல் இருப்பதற்காகவும், மகரந்த சேர்க்கை நடைபெறும்போது நெல்மணிகள் பதராகமல் இருப்பதற்காக நுண்ணூட்ட உரத்தை ஸ்பிரேயர் மூலம் தெளித்து வருகின்றனர்.