×

சீர்காழி அரியாப்பிள்ளை குளத்தில்

சீர்காழி, ஜூலை 19: சீர்காழி தாடளான் கோயில் மெயின் ரோட்டில் சுமார் 4 ஏக்கர் பரப்பளவு கொண்ட அரியாப்பிள்ளை குளம் உள்ளது. இந்த குளம் அப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்ந்து நல்ல குடிநீர் கிடைத்து வந்தது. ஆனால் காலப்போக்கில் அரியாப்பிள்ளை குளம் ஆக்கிரமிப்பாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் வறண்டு, செடி, கொடிகள் முளைத்து காடுகள்போல் காணப்பட்டு வருகிறது. இந்த குளத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சிலர் தங்களுக்கு சொந்தமென சொந்தம் கொண்டாடி குளத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்றனர். இதனை அப்பகுதி மக்கள் தடுத்து நிறுத்தினர்.இந்நிலையில், மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் திட்டம் சீர்காழி நகராட்சி பகுதியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக கடந்த சில நாட்களுக்கு முன் அரியாப்பிள்ளை குளத்தைத் தூர்வாரும் பணி நகராட்சி ஆணையர் அஜிதா பர்வின் தலைமையில் தொடங்கியது. இதில், நகராட்சி மேலாளர் ஆனந்தராஜ், நகரமைப்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன், பணிதள மேற்பார்வையாளர் பாலசுப்பிரமணியன், வருவாய் ஆய்வர் முத்துகிருஷ்ணன், துப்புரவு ஆய்வாளர் மோகன் உள்ளிட்ட நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள், துப்புரவுப் பணியாளர்கள் ஜேசிபி இயந்திரம், டிராக்டர்கள் ஆகியவற்றின் உதவியுடன் குளத்தில் முளைத்திருந்த செடி, கொடிகள், குப்பைகளை அகற்றி கரைகளைப் பலப்படுத்தும் பணியை செய்தனர்.

குளத்தை முழுமையாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றப்படும் என பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் ஆனால் குளத்தில் உள்ள செடி கொடிகள் குப்பைகள் மட்டுமே அகற்றப்பட்டுள்ளன இதனால் எந்த பயனும் இல்லை என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து குலத்தை முழுமையாக தூர்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி குளத்திற்கு தண்ணீர் வரும் பாதைகளை சரி செய்து குளத்தில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்த நிலையில் நேற்று நகராட்சி ஊழியர்கள் அரியப்பிள்ளைை குளத்தில் இரண்டு இடங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டி அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது குளம் தங்களுக்கு சொந்தமான குளம் எனக்கூறி வந்த சிலர் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்கும் பணியை நிறுத்த முயன்றனர். இதனைத் தொடர்ந்து நகராட்சி அதிகாரிகள் சீர்காழி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சீர்காழி இன்ஸ்பெக்டர் டெல்லி பாபு, சப்-இன்ஸ்பெக்டர் ராஜா சம்பவ இடத்திற்கு சென்று குளத்திற்கு சொந்தம் கொண்டாடியவர்களிடம் குளம் தொடர்பாக உங்களிடம் உள்ள ஆவணங்களை காண்பிக்கவும் பணிகளை தடுத்து நிறுத்த கூடாது எச்சரித்து அனுப்பினர். இதைத்தொடர்ந்து குளத்தில் மழைநீர் சேமிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்றது வருகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்