ஆற்காடு அருகே பன்றியை கொல்ல வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து மாடு படுகாயம்: விவசாயி கைது

ஆற்காடு, ஜூலை 19: ஆற்காடு அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் மாடு படுகாயமடைந்தது. இதுதொடர்பாக விவசாயி கைது செய்யப்பட்டார்.

ஆற்காடு அடுத்த சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராஜ்(28), விவசாயி. இவர் நேற்று முன்தினம் அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை அருகே தனக்கு சொந்தமான மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென வெடிச்சத்தம் கேட்டது.இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயராஜ் அங்கு சென்று பார்த்தார். அப்போது, மாடு தாடை கிழிந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்தது. இதையடுத்து, மாட்டை உடனடியாக மீட்டு அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு ஓட்டிச்சென்றார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஜெயராஜின் தந்தை கார்த்தி ஆற்காடு தாலுகா போலீசில் அளித்த புகாரின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினார். அதில், பயிர்களை நாசம் செய்யும் காட்டுப்பன்றியை கொல்ல வைத்த நாட்டு வெடிகுண்டு வெடித்து மாடு காயம் அடைந்தது தெரியவந்தது.இதுதொடர்பாக, அதே பகுதியை சேர்ந்த விவசாயி இந்திரன்(35) என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்.

Related Stories: