வாலாஜா, ஜூலை 19: வாலாஜா அருகே போலீசார் வாகன தணிக்கையின் போது, லாரியில் கடத்தி சென்ற 1.5 டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டை டிஎஸ்பி கீதா தலைமையில், வாலாஜா இன்ஸ்பெக்டர் பாலு மற்றும் போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வாலாஜா சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக சென்னை நோக்கி வேகமாக வந்த லாரியை சந்தேகத்தின் பேரில் போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசை பார்த்ததும் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சுற்றி வளைத்து அதிலிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் காட்பாடியை சேர்ந்த மகபூப்பாஷா(24), அமித்(34) மற்றும் திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை சேர்ந்த ஏழுமலை(37) என்பதும், கண்ணமங்கலத்தில் இருந்து செம்மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சென்னைக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது.