ஓமலூர், ஜூலை 18: தாரமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, புதியதாக அமைக்கப்பட்டுள்ள நான்குவழி புறவழி சாலையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஓமலூரில் இருந்து தாரமங்கலம், சங்ககிரி வழியாக மாநில நெடுஞ்சாலை செல்கிறது. தாரமங்கலம் நகரில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்துக்கள் நடந்து வந்தது. இந்த சாலை வழியாக ஓமலூரிலிருந்து தாரமங்கலம், சங்ககிரி வழியாக கோவை, கேரளாவுக்கு செல்ல முடியும். இந்த வழியை தவிர்த்து சேலம் வழியாக சென்றால், இடையில் 2 டோல்கேட்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இதனால், 90 சதவீத லாரிகள் இந்த வழியாக இயக்கப்பட்டு வருகிறது. மேலும், தாரமங்கலம் பகுதி குறுகிய சாலை என்பதால் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்நிலையில், தாரமங்கலம் நகரை தவிர்த்து புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதற்கான நிலம் தேர்வு குறித்தும் தினகரனில் செய்திகள் வெளிவந்தது.