அவிநாசி,ஜூலை18: திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த தெக்கலூரில் வசித்தவர் லோகநாதன்(49). இவர் சமத்துவபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவருக்கு சொந்தமாக தெக்கலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி சாலையில் புதிதாக வணிக வளாகம் கட்டி வந்தார். நேற்று மாலை லோகநாதன் இந்த கட்டிடத்தில் முதல் மாடியில் கிடந்த மண் மற்றும் குப்பைகளை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது முதல் மாடியில் இருந்து குப்பைகளை கீழே கொட்ட முயன்ற போது எதிர்பாராத விதமாக லோகநாதன் முதல் மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் மயங்கினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கோவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லோகநாதன் உயிரிழந்தார். இது தொடர்பாக அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.