சத்தியமங்கலம், ஜூலை 18:சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதி பீம்ராஜ் நகர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (40). விவசாயி. இவர் தனது தோட்டத்தில் ஆடு மாடு உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகிறார். நேற்று காலை ஆனந்த் வெள்ளாடு ஒன்றை தனது வாழைத்தோட்டத்தில் மேய்ச்சலுக்காக விட்டுவிட்டு தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது திடீரென ஆடு கத்தும் சத்தம் கேட்டது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது வெள்ளாடு கழுத்தில் ரத்தக்காயத்துடன் இறந்து கிடந்தது. ஏற்கனவே தொட்டகாஜனூர் பகுதியில் கடந்த வாரம் சிறுத்தை 2 ஆடுகளை அடித்துக்கொன்ற நிலையில், தற்போது மீண்டும் அதே பகுதியில் உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து வெள்ளாட்டை அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆனந்த் வனத்துறையினருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று வனத்துறையினர் அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடம் பதிவாகியுள்ள பகுதியை ஆய்வு செய்தனர். தாளவாடி மலைப்பகுதியில் தொடர் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என மலைகிராம விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.