ஊட்டி, ஜூலை 18:அருவங்காடு வெடிமருந்துத் தொழிற்சாலையில் ஏற்பட்டு வரும் தொடர் விபத்துக்களை தடுக்க பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீலகிரி எம்பி., ராசா மக்களவையில் வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் நீலகிரி எம்பி., ராசா மக்களவையில் பேசியதாவது, குன்னூர் அருகே அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த தொழிற்சாலையில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலார்களும், 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்றனர். சமீப காலமாக இந்த தொழிற்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த 2017ம் ஆண்டு முதல் இதவரை இந்த தொழிற்சாலையில் கார்ட்ரைட் பிரிவில் மூன்று முறை விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் 28ம் தேதி இரவு பணியின் போது ஏற்பட்ட விபத்தில், 5 பேர் காயம் அடைந்தனர்.
இந்த விபத்து ஏற்பட காரணம் அதிகாரிகளின் மெத்தன போக்கே. இந்த விபத்துக்களை பற்றி தொழிற்சாலை பொது மேலாளர் மீது உயர் மட்ட குழு விசாரணை அமைத்து துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கடந்த 2010ம் ஆண்டு நடந்த விபத்தில் 5 பேரும், 2014 நடந்த விபத்தில் ஒரு தொழிலாளியும், கடந்த இரு மாதங்களுக்கு முன் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 2017ம் நடந்த விபத்தில் ஜிசி., பிரிவில் ஒரு ஒப்பந்த தொழிலாளியும் இறந்துள்ளார். இதுவரை ஒப்பந்த ஊழியர்களுக்கு கருணை தொகையும் வழங்கவில்லை. எனவே, இந்த தொழிற்சாலையில் நடக்கும் விபத்துக்களை தவிர்க்க பாதுகாப்புத்துறை உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.