ஊட்டி, ஜூலை 18: ஊட்டியில் மீண்டும் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு மூன்று நாட்களாக மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி மூன்று மாதங்கள் தென்மேற்கு பருவ மழை பெய்யும். ஆனால், இம்முறை கடந்த இரு மாதங்களுக்கு மேலாக பெய்யாமல், அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது. சில சமயங்களில் சாரல் மழையுடன் காற்று வீசியது. கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயில் அடித்து வந்தது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தின் சில பகுதிகளில் வெயில் அடித்த போதிலும், ஊட்டி மற்றும் சுற்றப்புற கிராமங்களில் மட்டும் மழை பெய்தது. இந்நிலையில் நேற்றும் ஊட்டியில் மழை பெய்தது. காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் வாட்டியது. சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. ஊட்டியில் மீண்டும் மழை பெய்துள்ளதால், பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.