ஈரோடு, ஜூலை 18: சி.கே.கே., அறக்கட்டளை சார்பில், நடக்க உள்ள 41ம் ஆண்டு இலக்கிய விழாவில் கவிஞர் அறிவுமதிக்கு இலக்கிய விருது வழங்கப்படுகிறது. ஈரோடு சி.கே.கே., அறக்கட்டளை சார்பில் ஆண்டு தோறும் இலக்கிய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில், எழுத்தாளர்கள், கவிஞர்கள், படைப்பாளிகள், எழுத்து மூலம் சமூகம் சீர்திருத்தம் உள்ளிட்ட பணிகளில் சேவை செய்தவர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். அதன்படி, 41ம் ஆண்டு இலக்கிய விழா வருகிற 21ம் தேதி ஈரோடு பெருந்துறை ரோடு பரிமளம் மஹாலில் நடக்கிறது. இந்த விழாவில், தலைவர் ராஜமாணிக்கம் வரவேற்புரையாற்றுகிறார். பாலுசாமி, பழனிச்சாமி, ராமலிங்கம் ஆகியோர் முன்னிலை, வகிக்கின்றனர். மேலும் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் அறிவுமதிக்கு இலக்கிய விருது மற்றும் பொற்கிழி வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து மகளிர் அரங்கம் நடக்கிறது. மதியம் கருத்தரங்கம் நடக்கிறது. அதில் ராஜாராம் தலைமையில் “சுடர் கீழ் நோக்கி எரிவதில்லை” என்ற தலைப்பில் மரபின் மைந்தன் முத்தையா, “தேனீரை அனுபவித்து குடியுங்கள்” என்ற தலைப்பில், அருள் பிரகாசம், “வாழ்வெனும் பெரும் குளம்” என்ற தலைப்பில் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் பேசுகின்றனர். இந்நிகழ்ச்சியில் விழா நிறைவில் வேலுமணி நன்றி கூறுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சி.கே.கே. அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.