கோபி, ஜூலை 18: கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் வனசரகத்திற்குட்பட்ட குன்றி வனப்பகுதியில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கியுடன் மர்ம நபர்கள் நடமாட்டம் இருப்பதாக மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் குன்றி வனப்பகுதியில் சோதனை செய்த போது, குன்றி இந்திரா நகரை சேர்ந்த சித்தன் மகன் முருகன் என்கிற கோமாளி (55), கிளமான்ஸ் தொட்டியை சேர்ந்த லூர்துசாமி மகன் ராயப்பன் (40), அதே பகுதியை சேர்ந்த பிச்சமுத்து மகன் சின்ராஜ் (45) ஆகிய 3பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து உரிமம் இல்லாத 3 துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அதே போன்று தொட்டகோம்பை வனப்பகுதியில் துப்பாக்கியுடன் இருந்த தொட்டகோம்பை பகுதியை சேர்ந்த குருசாமி மகன் முருகன் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஈரோடு மாவட்ட வனப்பகுதியில் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததாக 17 பேரும், பிஸ்டல் வைத்திருந்ததாக ஒருவரையும் மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.