×

பாதாளச் சாக்கடை பணியால் கண்டமான பைபாஸ் சாலை விருதுநகரில் வாகன ஓட்டிகள் அவதி

விருதுநகர் ஜூலை 18: விருதுநகரில் பாதாளச் சாக்கடை பணியால் கண்டமான காமராஜர் பைபாஸ் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருதுநகரில் உள்ள அல்லம்பட்டி காமராஜர் பைபாஸ் சாலை போக்குவரத்து மிகுந்த முக்கிய சாலையாக உள்ளது. இச்சாலை வழியாக வாகனங்கள் அதிகமாக சென்று வருகின்றன. அல்லம்பட்டியில் இருந்து பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவியர் காமராஜர் பைபாஸ் சாலை  மூலம் தரைபாலம் வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியில் பாதாளச் சாக்கடை பணிக்காக, பல மாதங்களுக்கு முன் பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. இந்தப் பள்ளத்தை நகராட்சி நிர்வாகம் சரியாக மூடவில்லை. மேலும், சாலையையும் சீரமைக்காமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில், எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும் டூவீலர்கள் விபத்தில் சிக்குகின்றன. எனவே, காலை, மாலை வேளைகளில் மாணவ, மாணவியர்கள் அதிகமாக செல்லும் குறுகலான சாலையில், தோண்டிய பள்ளத்தை உடனடியாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி