உசிலம்பட்டி, ஜூலை 18: உசிலம்பட்டி பகுதியில் விதை மோசடியால் வெண்டை செடியில் வெள்ளை காய்களாக விளைந்துள்ளது. இது போதிய விலை போகாததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். உசிலம்பட்டி, செல்லம்பட்டி, ஒன்றியங்களில் உள்ள உத்தப்பநாயக்கனூர், பெரிய மற்றும் சின்னசெம்மேட்டுப்பட்டி, செட்டியபட்டி, கல்லூத்து, பெருமாள்பட்டி, குப்பணம்பட்டி, ஆணையூர், போலியபட்டி, கட்டக்கருப்பன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வெண்டைக்காய் அதிகளவில் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் கடந்த 5ஆண்டுகளாக போதிய மழையில்லாமல் நிலத்தடிநீர் மட்டம் குறைந்து குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவி வருகிறது. எனினும் குறைந்தளவு தண்ணீரை கொண்டு விவசாயம் செய்து வருகி–்ன்றனர். இந்நிலையில் இப்பகுதிகளில் விதை மோசடியால் வெண்டைக்காய்கள் பசுமை இல்லாமல் வெள்ளை காய்களாக விளைந்துள்ளன. குறிப்பாக ஆனையூர், போலியபட்டி பகுதிகளில் பயிரிட்ட வெண்டைக்காய் விதைகள் அனைத்துமே பசுமை இல்லாமல் வெள்ளை காய்களாக உள்ளது. பொதுவாக விதைகளாக உள்ளபோது இது எந்த வகை வெண்டக்காய் விதை என்பதனை சாதரணமான விவசாயிகளால் அறியமுடியாது. இதுசார்ந்த விஷயங்களை வேளாண்மைத்துறையினர் அப்பகுதியில் உரம் மற்றும் விதைகளை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஆய்வு செய்து தரமான விதைகளை விவாசாயிகளுக்கு கிடைக்க செய்ய வேண்டும். ஆனால் அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் பெருத்த நஷ்டம் ஏற்பட்டு விவசாயத்தையே கைவிடக்கூடிய சூழல் உருவாகுகிறது. தற்போது இப்பகுதியில் விளையக்கூடிய பசுமையான வெண்டைக்காய் கிலோ ரூ20க்கு வியாபாரிகள் வாங்குகின்றனர். அதேவேளையில் வெள்ளை வெண்டைக்காய் என்றழைக்கப்படும் இந்தவகை வெண்டக்காய் ரூ.8க்கு மட்டுமே வாங்குகின்றனர். மேலும் மறுமுறை கொண்டுசென்றால் இந்த வெண்டைக்காய் சுத்தமாகவே வேண்டாம் என்றும், எங்களிடம் சில்லரை வியாபாரிகள் வாங்காமல் இருக்கும் போது, இதனை நாங்கள் வாங்கி நஷ்டப்பட முடியாது என மார்க்கெட்டில் வியாபாரிகள் கூறுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.