×

மதுரை மாநகரை சுற்றி 15 கிமீ சுற்றளவில் வீடுகள் கட்ட உள்ளூர் திட்ட குழும அனுமதி பெறுவதில் சிக்கல்

மதுரை, ஜூலை 18: மதுரை மாநகரை சுற்றி 15 கிமீ சுற்றளவில் வீடுகள் கட்டுவதற்கு உள்ளூர் திட்டக்குழும அனுமதி பெறுவதிலுள்ள சிக்கலை தீர்க்க வேண்டுமென சட்டப்பேரவையில் மதுரை கிழக்கு தொகுதி திமுக எம்எல்ஏ மூர்த்தி பேசினார்.
சட்டப்பேரவையில் அவர் பேசியதாவது:மதுரை மாநகர் மைய பகுதியில் இருந்து 15 கிமீ. சுற்றளவில் உள்ளூர் திட்டக்குழுமம் சார்பில் மாஸ்டர் பிளான் தயாரித்து 15 ஆண்டுகளாகிறது. இன்னும் மக்கள்  பயன்படுத்தும் வகையில் வளர்ச்சி அடையவில்லை. குடியிருப்புகள் கட்டுவதற்கு ஏதுவாக இல்லாமலும், விவசாயத்திற்கு ஏதுவாக இல்லாமலும் உள்ளது. எனவே அந்த பகுதி நில உரிமையாளர் விரும்பும் வகையில் குடியிருப்பு பகுதியாகவோ, தொழிற்சாலை பகுதியாகவோ மாற்றம் செய்திட எளிதான முறையில் உள்ளூர் திட்டக்குழும அனுமதி அளித்திட வேண்டிய அவசியமாகும். வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் 21 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது குடமுழுக்கு நடைபெற பணிகளை துரிதப்படுத்திட வேண்டும். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கடந்த 2018 பிப்ரவரியில் தீ விபத்து நிகழ்ந்து சேதங்கள் ஏற்பட்டன. அதனை விரைவாக சீரமைத்து முடிக்க வேண்டும். இந்த கோயிலில் கட்டணமின்றி, விரைவாக பக்தர்கள் தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சோழவந்தான் அருகே குருவித்துறை கோயிலில் 2 கால பூஜையை மூன்று கால பூஜையாக்க வேண்டும். வண்டியூர் கண்மாயை சுற்றுலாத்தலமாக மேம்படுத்த வேண்டும். சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பாதையை சீரமைத்து பக்தர்களுக்கு வசதி செய்து தர வேண்டும். இவ்வாறு பேசினார்.



Tags :
× RELATED பதற்றமான வாக்குச்சாவடிகளை தீவிரமாக...