×

முத்தாலங்குறிச்சி குளத்தை தூர்வார ஒதுக்கீடு செய்த ரூ.3.43 கோடி மாயம்? கலெக்டரிடம் கிராம மக்கள் நலக்குழு புகார்

செய்துங்கநல்லூர், ஜூலை 18:  தாமிரபரணி ஆற்றில் 7வது அணைக்கட்டாக திகழும் மருதூர் அணைக்கட்டில் மருதூர் மேலக்கால்வாய் மூலம் முத்தாலங்குறிச்சி குளம் பாசனம் பெறுகிறது. இக்குளத்தினை தூர்வாரி மேம்படுத்தவும், குளத்துக்கு வரும் வரத்து கால்வாயான முக்கவர் சாணலை சீரமைக்கவும் பொதுப்பணித்துறை நாங்குநேரி சிறப்பு திட்ட உபகோட்டம் வாயிலாக சுமார் 3.43 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து முத்தாலங்குறிச்சி குளம் கரை மேம்படுத்தப்பட்டு, மடை மற்றும் புறமடை வேலை நடந்து முடிந்துள்ளது. ஆனால் அளவுக்குமேல் குளத்துக்குள் மணல் அள்ளியதால் குளத்தில் தண்ணீர் நிற்பதில்லை. எனவே, மேடான இடத்தில் இருந்த மண்ணை  பள்ளத்தில் அள்ளி போட்டு ஒன்றுபோல் குளத்தினை அமைத்து தரவேண்டும். உள்ளே உள்ள மண்ணை செங்கல் சூளைக்கு விற்றுவிடக்கூடாது என  கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் மகளிர் மன்ற தலைவி குணேஸ்வரி  மனுகொடுத்தார்.

 இதையடுத்து கடந்த வாரம்  ஊருக்கு நூறு கை திட்டத்தின் கீழ், குளத்தை சீரமைக்கும் பணியை கலெக்டர் சந்தீப் நந்தூரி துவக்கிவைத்தார்.  இதனிடையே கருங்குளம் கிராம நலக்குழு செயலாளர் உடையார் தூத்துக்குடியில் கடந்த 15ம் தேதி நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தார். அதில்  முத்தாலங்குறிச்சி குளத்தையும், வரத்து கால்வாய்களையும் சீரமைக்க பொதுப்பணித்துறை ஏற்கனவே ஒதுக்கீடு செய்த ரூ.3.43 கோடி என்னவாயிற்று. அத்தொகையை கொண்டே முழுமையாக குளத்தை சீரமைத்துவிடலாம். அப்படியிருக்க ஊருக்கு நூறு கை திட்டத்தின் கீழ் இக்குளத்தினை தூர் வாருகிறோம் என பொதுப்பணித்துறை மக்களை ஏமாற்ற பார்க்கிறது. எனவே, இதுவிஷயத்தில் கலெக்டர் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.    புரியாத புதிர்:  இதுகுறித்து கருங்குளம் கிராம மக்கள்நலக்குழு செயலாளர் உடையார் மேலும் கூறுகையில், ‘‘வைகுண்டம் வட்டார சட்ட பணிக்குழு மூலமாக கருங்குளம் குளத்தை தூர் வாரக்கோரி மனு அளித்திருந்தேன். இதற்குப் பதிலளித்த நாங்குநேரி சிறப்பு திட்ட உபகோட்ட உதவிசெயற்பொறியாளர் ஜெயசுதா, கருங்குளம் உள்ளிட்ட 14 குளங்களை தூர் வார நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம் என பட்டியலிட்டிருந்தார். அதில் முத்தாலங்குறிச்சி குளம் 43 லட்சத்து 40 ஆயிரத்து 989 ரூபாய் செலவிலும், குளத்துக்கு வரத்து கால்வாய் முக்கவர் சாணல் 2 கோடியே 93 லட்சத்து 62 ஆயிரத்து 838 ரூபாய் செலவிலும் தூர் வார நடவடிக்கை எடுத்து வருவதாக  கூறியிருந்தார்.

 முத்தாலங்குறிச்சி குளம்  கரை செம்மை படுத்தப்பட்டு மடை, புறமடை கட்டப்பட்டு, போதிய ஷட்டர் அமைக்கப்படாமல் உள்ளது. முக்கவர் சாணல் வேலை ஆரம்பிக்கப்படவில்லை. இந்த பணமே  முத்தாலங்குறிச்சி குளத்தினை மகளிர் குழுவினர்  கூறிய படி  நிரப்பி, மணல்கொள்ளை போகாமல் தடுக்க ஏதுவானது.    ஆனால்,  அந்நிதியை கொண்டு மக்கள் பங்கீடு என பொதுப்பணித்துறை ஏன் திசை திருப்புகிறது என்பது புரியாத புதிராக உள்ளது’’ என்றார்.

Tags :
× RELATED புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தின் வளர்ச்சி நிதி வழங்கல்