ஸ்பிக்நகர், ஜூலை 18: தூத்துக்குடி மாநகராட்சி, தெற்கு மண்டலத்தில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை திரும்பப்பெற வேண்டும். மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். சேதமடைந்த சாலைகளை துரிதமாக சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. கட்சியின் புறநகர் செயலாளர் ராஜா தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பேச்சிமுத்து, மாவட்ட குழு உறுப்பினர் பூமயில் புற நகர் குழு உறுப்பினர் ராமசாமி, முருகன், வெள்ளைச்சாமி, சுதா, கிளைச் செயலாளர்கள் சுப்பையா, கிருஷ்ண பாண்டி, வீரபெருமாள், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்டச் செயலாளர் மாரிச்செல்வம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் பொதுமக்களும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதையடுத்து மாநகராட்சி வருவாய் உதவி ஆணையாளர் பாலசுந்தரம், முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் சிவ செந்தில்குமார், எஸ்ஐ ராஜபிரபு மற்றும் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், வீட்டு வரி உயர்வு குறைப்பது குறித்து பரிசீலனையில் உள்ளதால் மறு உத்தரவு வரும் வரை சொத்துவரி, வீட்டு வரி கட்ட நிர்பந்திக்க மாட்டோம். அதுவரை குடிநீர் டெபாசிட் கட்டணம் உள்ளிட்ட இதர வரி கட்ட வருபவர்களிடம் புதிய வரி கட்ட வேண்டும் என கட்டாயப்படுத்த மாட்டோம் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அத்துடன் குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், சாலைகளை சீரமைக்கவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதை ஏற்றுக்கொண்ட போராட்டக்குழுவினர் கலைந்து சென்றனர்.