×

மீன்பிடி உடமைகளுக்கு 9 மீனவர்களுக்கு காப்பீட்டு தொகை

முத்துப்பேட்டை, ஜூலை 18: முத்துப்பேட்டை பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் மீன்பிடி உடமைகளுக்கு காப்பீட்டு தொகை வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசு மீன்வளத்துறை சார்பில் சுனாமிக்கு பிந்தைய நிலைத்த வாழ்வாதாரத்திட்டம் மூலம் மீனவர்களுக்கு மீன்பிடி உடமைகளுக்கான காப்பீட்டு திட்டம், பிபார்ம்ஸ் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் திருவாரூர் மாவட்டத்தில் இத்திட்டத்தில் சேர்ந்த மீனவர்களின் படகுகள் மற்றும் இயந்திரங்கள் கஜா புயலினால் பாதிக்கப்பட்டன. இந்த மீனவர்களின் மீன்பிடி உடமைகளுக்கு காப்புறுதி திட்டத்தின் வாயிலாக முத்துப்பேட்டை பகுதியில் கற்பகநாதர்குளம், தொண்டியக்காடு, ஜாம்புவானோடை, தில்லைவிளாகம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த 9 மீனவர்களுக்கு மொத்தம் ரூ. 1,06,200 வழங்கப்பட்டது. இந்த நிலையில் முத்துப்பேட்டை மீன்வளத்துறை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் மேற்கண்ட மீனவர்களுக்கு காப்பீட்டு தொகை மீன்வளத்துறை சார்பில் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட செயலாக்க அலுவலர் செல்வம், திருவாரூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் ராஜேஷ்குமார், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு அலுவலர் பாலசுப்பிரமணியன், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மாவட்ட மீனவர்களின் சம்மேளனம் சரவணன், மீன்வளத்துறை ஆய்வாளர் ரங்கநாதன், சமுதாய வளர்ச்சி அலுவலர் சீனியரசு மற்றும் மீனவ பிரதிநிதிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு