திருவாரூர், ஜூலை 18: திருவாரூர் மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அரசின் உதவிதொகை பெற அடுத்த மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழக அரசால் 2006ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 30ந்தேதியன்றோ அல்லது அதற்கும் முன்பாக பதிவு செய்து 5 ஆண்டுகள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு மாதம் ரூ.200ம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.600ம் என இந்த உதவி தொகை தற்போது வழங்கப்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி இனத்தவருக்கு 45 வயதிற்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதிற்குள்ளும் இருத்தல் வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு பள்ளி இறுதிவகுப்புவரை படித்தவர்களுக்கு மாதம் ரூ.600-ம், மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.750ம், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ ஆயிரமும் உதவித்தொகையாக வழங்கப்படுகிறது. இவர்கள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த மாதம் 30ம் தேதியுடன் ஓராண்டு பூர்த்தியாகி இருக்க வேண்டும். இவர்களுக்கு வருமான உச்ச வரம்பு ஏதுமில்லை. விண்ணப்ப படிவத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 31ம் தேதிக்குள் திருவாரூர் மன்னார்குடி சாலையில் இயங்கி வரும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் அளிக்க வேண்டும்.