திருவாரூர், ஜூலை 18: திருவாரூர் கலெக்டர் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன் சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்விக் கடன், கறவை மாடு கடனுதவி, ஆட்டோ கடன் போன்ற திட்டங்களுக்கு நடப்பு நிதியாண்டில் திருவாரூர் மாவட்டத்திற்கு என மொத்தம் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுபான்மையின கிறிஸ்துவர், இஸ்லாமியர், சீக்கியர், புத்தமதத்தினர் மற்றும் ஜெயின் மதத்தினர் ஆகியோர் இதற்கான கடன் வழங்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த சிறப்பு முகாமானது குடவாசல் தாலுக்கா அலுலவலகத்தில் இன்று (18ம் தேதியும்), வலங்கைமானில் 25ந் தேதியும், நீடாமங்கலத்தில் அடுத்த மாதம் 1ந் தேதியும், மன்னார்குடியில் 8ந் தேதியும், திருத்துறைப்பூண்டியில் 22ந் தேதியும், கூத்தாநல்லூரில் 29-ந் தேதியும் இந்த சிறப்பு முகாமானது நடைபெறுகிறது.
இதில் சிறுபான்மையின மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் இளங்கலை மற்றும் முதுகலை மற்றும் தொழில் கல்வி, தொழில்நுட்ப கல்வி பயில்பவர்கள் அதிகபட்சமாக திட்டம் ஒன்றின் கீழ் ரூ.20 லட்சம் வரையிலும், திட்டம் 2ன் கீழ் ரூ.30 லட்சம் வரையிலும் 3 சதவீத வட்டி விகிதத்தில் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. எனவே இந்தத் திட்டத்தில் கடன் பெற விரும்புபவர்கள் தாங்கள் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமான சான்று, இருப்பிட சான்று, கடன் கோரும் தொழில் திட்டம் குறித்து அறிக்கை மற்றும் கூட்டுறவு வங்கிகள் கோரும் ஆவணங்களுடன் பள்ளி மாற்றுச் சான்று, உண்மை சான்று, கல்வி மதிப்பெண் சான்று ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.