தஞ்சை, ஜூலை 18: தஞ்சை ராசா மிராசுதார் மருத்துவமனையில் ரூ.10 லட்சம் செலவில் புதிய தானியங்கி ரத்த பரிசோதனை இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.தஞ்சையில் உள்ள அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை நோயாளிகளுக்கு ரத்த பரிசோதனை மாதிரி எடுத்து அதை மருத்துவக்கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைப்பது வழக்கம். அங்கிருந்து தான் ரத்த பரிசோதனை முடிவுகள் வெளிவரும். இதனால் காலதாமதம் ஏற்பட்டது.இதை தவிர்க்கும் வகையில் ராசா மிராசுதார் மருத்துவமனையிலேயே ரூ.10 லட்சம் செலவில் புதிய தானியங்கி ரத்த பரிசோதனை இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. புதிய ரத்த பரிசோதனை இயந்திரத்தை மருத்துவக்கல்லூரி டீன் குமுதா லிங்கராஜ் துவக்கி வைத்தார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ராசா மிராசுதார் மருத்துவமனையில் புதிய தானியங்கி ரத்த பரிசோதனை இயந்திரம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இது முழுக்க முழுக்க இலவசமாக ரத்த பரிசோதனை செய்யப்படும். இந்த இயந்திரம் மூலம் ஒரே நேரத்தில் 150 பேர்களுக்கு ரத்த பரிசோதனை செய்யலாம். மேலும் ஒரே நேரத்தில் 50க்கும் மேற்பட்ட வகையான ரத்த பரிசோதனை செய்யலாம் என்பது இந்த இயந்திரத்தின் சிறப்பு அம்சமாகும். இதன்மூலம் ரத்த பரிசோதனை முடிவுகள் அறிவதில் காலதாமதம் ஏற்படாது. வெறும் 3 மில்லி ரத்தம் மூலம் துல்லியமாக முடிவு உடனுக்குடன் கிடைக்கும். 24 மணி நேரமும் ஆய்வகம் இயங்கும்.