×

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம், ஜூலை 18: காஞ்சிபுரம் மாவட்டத்தில் படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பொன்னையா அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின்கீழ் 10ம் வகுப்பு தோல்வி அடைந்தவர்களுக்கு 200 ரூபாயும், தேர்ச்சி பெற்றவர்களுக்கு 300 ரூபாயும், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 400 ரூபாயும், பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு 600 ரூபாயும் மாதந்தோறும் உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.
 இத்தகுதி பெற்ற வேலைவாய்ப்பற்றோர் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதுமானது. பதிவினை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். எம்பிசி, பிசி (முஸ்லிம்), ஓபிசி.ஓசி வகுப்பினர் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், எஸ்சி, எஸ்டி, எஸ்சி (அருந்ததியர்) 45 வயதிற்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு வயதுவரம்பு இல்லை.

விண்ணப்பதாரரின் ஆண்டு வருமானம் 50 ஆயிரத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வருமான வரம்பு இல்லை. ஏற்கனவே வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித் தொகை பெற்றிருக்கக்கூடாது.மேற்காணும் தகுதியுடைய பதிவுதாரர்கள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இலவசமாக வழங்கப்படும் விண்ணப்பத்தினை வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன் நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in//Empower என்ற இணையதள முகவரியிலும் பதிவுசெய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் அதில் குறிப்பிட்டுள்ளவாறு, வருவாய் ஆய்வாளர் அளவில் வழங்கப்பட்ட சான்று, கல்விச்சான்று நகல், சாதிச்சான்று நகல் மற்றும் தேகியமயமாக்கப்பட்ட வங்கியின் சேமிப்பு கணக்கு புத்தக நகல் இணைத்து ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும். உதவித்தொகை பெறுவதால் வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக பெறப்படும் பரிந்துரைகள் எதுவும் பாதிக்கப்படமாட்டாது என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED மதுராந்தகம் பகுதியில் நீர் ஆவியாவதை...