கீழ்ப்பாக்கம், ஜூலை 18: சென்னை அயனாவரம், பங்காரு தெருவை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (45). தனியார் நிறுவன மேலாளர். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அயனாவரம் கான்ஸ்டபிள் ரோட்டில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். பணத்தை எடுத்துவிட்டு ஏடிஎம் கார்டை எடுக்க முயன்றபோது கார்டு மிஷினில் சிக்கிக்கொண்டது. கார்டை பிடித்து இழுத்தபோது ஏடிஎம் மெஷினின் முன்பகுதி பெயர்ந்து விழுந்தது. அப்போது மெஷினின் முன் பகுதியில் ஒரு ரகசிய கேமராவும், ஸ்கிம்மர் கருவியும் பொருத்தப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோபிகிருஷ்ணன் அயனாவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் மனோகரன், அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர்.