×

கேமரா, ஸ்கிம்மர் கருவி பொருத்தி ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி: மர்ம நபர்களுக்கு வலை

கீழ்ப்பாக்கம், ஜூலை 18: சென்னை அயனாவரம், பங்காரு தெருவை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (45). தனியார் நிறுவன மேலாளர். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு அயனாவரம் கான்ஸ்டபிள் ரோட்டில் உள்ள ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றார். பணத்தை எடுத்துவிட்டு ஏடிஎம் கார்டை எடுக்க முயன்றபோது கார்டு மிஷினில் சிக்கிக்கொண்டது. கார்டை பிடித்து இழுத்தபோது ஏடிஎம் மெஷினின் முன்பகுதி பெயர்ந்து விழுந்தது. அப்போது மெஷினின் முன் பகுதியில் ஒரு ரகசிய கேமராவும், ஸ்கிம்மர் கருவியும் பொருத்தப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோபிகிருஷ்ணன் அயனாவரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு கீழ்ப்பாக்கம் துணை போலீஸ் கமிஷனர் மனோகரன், அயனாவரம் உதவி கமிஷனர் பாலமுருகன், இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர்.

அப்போது பணம் எடுக்க வருபவர்களின் ஏடிஎம் கார்டின் ரகசிய எண்களை பதிவு செய்து அவர்களின் வங்கி கணக்கில் பணம் திருடுவதற்காக மர்ம நபர்கள் கருவிகளை பொருத்தியது தெரிந்தது. இதுகுறித்து வங்கியின் மேலாளரை செல்போனில் தொடர்பு கொண்டு போலீசார் விசாரித்தபோது சம்பவம் நடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஏடிஎம்மில் பணம் நிரப்பியது தெரிந்தது. எனவே ஏடிஎம்மில் ரகசிய கேமரா, ஸ்கிம்மர் கருவி பொருத்திய மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடந்தி வருகின்றனர். இந்த சம்பவம் வங்கி சம்மந்தப்பட்ட பிரச்னை என்பதால் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டுள்ளது.

Tags :
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...