சின்னசேலம் ஒன்றியத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

சின்னசேலம், ஜூலை 18: சின்னசேலம் ஒன்றியத்தில் மழைநீர் சேகரிப்பு திட்டம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு செய்து மாணவர்களிடம் மழைநீர் சேமிப்பின் அவசியத்தை வலியுறுத்தினார்கள்.சின்னசேலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பாக்கம்பாடி, நைனார்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் சுற்று சூழலை ஆய்வு செய்வதற்காக டெல்லியை சேர்ந்த மத்திய நிதித்துறை இயக்குநர் அனுஸ்மான் சர்மா, மத்திய நீர்வள ஆணையத்தின் தொழில்நுட்ப அலுவலர் ஹரி சேகர் ஆகியோர் வந்து ஆய்வு செய்தனர். குறிப்பாக நைனார்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தனர். பின்னர் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்தபோது மழைநீர் சேகரிப்பு பைப்புகள் உடைந்தும், சில இடங்களில் இல்லாமலும் இருந்தது. இதை உடனடியாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். பின்னர் அவர்கள் தலைமை ஆசிரியர் நர்மதா, மாணவர்கள், ஆசிரியர்களிடம் கலந்துரையாடும்போது மழைநீர் சேகரிப்பு அவசியம் என்பதுடன், 300 அடிக்கும் கீழ் நிலத்தடி நீர்மட்டம்  போனால் குடிநீர் அமிலத் தன்மையாகிவிடும். ஆகையால் தங்களுடைய வீடு, சுற்றுப்புறங்களில் மரங்களை நடுவதுடன், மழைநீர் சேகரிப்பு குட்டைகளை உருவாக்க வேண்டும் என்றார். பின்னர் ஊராட்சி சேவை மைய அலுவலகம் மற்றும் அதை சுற்றி உள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மரக்கன்று தோட்டம், மழைநீர் சேகரிப்பு குட்டைகள், மழைநீர் சேகரிப்பு பள்ளங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு பிடிஓ மற்றும் ஊராட்சி நிர்வாகத்தை பாராட்டினார். இதையடுத்து பாக்கம்பாடி, தோட்டப்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கும் சென்று ஏரி குடிமராமத்து பணிகளை பார்வையிட்டு தரமாக செய்ய பொதுப்பணித்துறைக்கு அறிவுரை வழங்கினர். இதில் வெள்ளாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் சுந்தரேசன், வட்டார வளர்ச்சி அலுவலர் வீராங்கன், பொறியாளர்கள் தனபால், அன்பழகன், ஊராட்சி செயலர் தமிழ்வாணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: