×

பெண்ணிடம் ரூ.35ஆயிரம் அபேஸ்

திருவெண்ணெய்நல்லூர், ஜூலை 18: திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி பவுன்(38). இவர் நேற்று காலை திருவெண்ணெய்நல்லூர் இந்தியன் வங்கிக்கு சென்று தனது வங்கி கணக்கிலிருந்து ரூ.35ஆயிரம் பணம் எடுத்துள்ளார். பின்னர் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு புறப்பட்டார்.  இதனிடையே வங்கியின் எதிரே நிறுத்தப்பட்டிருந்த மினி வேனில் காய்கறி விற்பனை செய்துள்ளனர். அதை வாங்குவதற்காக பவுன் சென்றுள்ளார். அப்போது மினிவேனில் பணப்பையை வைத்துவிட்டு காய்கறி வாங்கியுள்ளார். திரும்பிப் பார்த்தபோது கண் இமைக்கும் நேரத்தில் பணப்பையை காணவில்லை. பணத்தை பறிகொடுத்த பவுன் அழுது புலம்பிக் கொண்டு அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்தார். இருப்பினும் பணம் கிடைக்கவில்லை.  இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை அபேஸ் செய்த மர்ம ஆசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர். திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதனால்  திருவெண்ணெய்நல்லூர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். இச்ம்பவம் அப்பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை